இங்கு என் பெயர், என்
கணவர் பெயர், என் குழந்தையின்
பெயர்களை தவிர மற்றவர்களின்
பெயர்கள் மாற்றப்பட்டு
இருக்கின்றன.
|

என் இனிய கணவர்
! என் பிள்ளையின் தந்தை
!
என் கணவரின் பெயர்
தனஞ்செயன். அவர் தம்பியின்
பெயர் ஈஸ்வரன் என்கிற
ஈசு. நான் ஈசு மாமா என்று
அழைப்பேன். என் அக்கா
பெயர் சசி. நான் என் அக்காவின்
கணவரின் அண்ணனை தான்
திருமணம் செய்துக் கொண்டு
இருக்கிறேன். என் குழந்தைக்கு
அப்படியானால், என் அக்கா
பெரியம்மாவா? இல்லை, சித்தியா?
என் கணவரின் தம்பி சித்தப்பா
என்றால் சித்தப்பாவின்
மனைவியான் என் அக்கா
என் மகனுக்கு சித்தியாகத்
தானே இருக்க வேண்டும்?
ஆனால் என் வழியில் பார்த்தால்
என் அக்கா பெரியம்மா
ஆக வேண்டும். அப்படியானால்
என் அக்காவின் கணவரான
ஈசு மாமா பெரியப்பாவா?
பெரியப்பாவின் அண்ணான
என் கணவர் என் குழந்தைக்கு
பெரியப்பவா? நான் என்
குழந்தைக்கே பெரியம்மாவா?
இந்த இனிமையான குழப்பம்
எங்கள் வீட்டில் உண்டு.
ஆனால் விடை தெரியாத குழப்பம்.
என் அக்காவின் குழந்தைகள்
என்னை சித்தி என்றும்,
என் கணவரை சித்தப்பா
என்றும் அழைக்கிறார்கள்.
இதற்கே ஈசு மாமாவுக்கு
கோபம். உன்னை என் குழந்தைகளை
பெரியம்மா என்று அழைக்க
வைக்கிறேன் பார் என்று
சபதம் போட்டார். என்
மனைவியை விட நீ பெரியவள்
என ஆக்குகிறேன் என்றும்
சொன்னார். பெண்கள் எதை
விட்டுக் கொடுத்தாலும்
கொடுப்பார்கள், தன் வயதை
மட்டும் விட்டுக் கொடுக்க
மாட்டர்கள். நான் என்
அக்காவின் குழந்தைகளை
என்னை சித்தி என்றும்
என் கணவரை சித்தப்பா
என்றும் அழைக்கப் பழக்கி
விட்டேன். இப்போது என்
குழந்தையை தன்னை சித்தப்பா
என்றும் தம் மனைவியான
என் அக்காவை சித்தி எனவும்
அழைக்க வைக்கிறேன் என்றும்
சொல்லி இருக்கிறார்.
அவரின் குழந்தைகளையே
பழக்கின எனக்கு என் குழந்தை
பழக்குவதா கஷ்டம். இதுவரை
எங்களை பற்றி தெரியாதவர்கள்
--அதாவது அண்ணன் தம்பிகளை,
அக்காளும் தங்கையும்
மாற்றி கல்யாணம் செய்துக்
கொண்டது பற்றி-- தெரிய
வந்தால் நாங்கள் அக்காள்
தங்கை இருவரும் தனியே
வெளியே வரும் போது ஒரு
மாதிரியாக பார்த்து நமுட்டு
சிரிப்பு சிரிப்பார்கள்.
என் அக்காவை விட என்னை
கொஞ்சம் ஒரு மாதிரியாக
சமயத்தில் கொஞ்சம் அதட்டலாகவும்
கூட சிரிப்பார்கள். நான்
அவர்களுக்கும் மேலாக
சிரித்து விட்டு வருவேன்.
இதில் என்ன இருக்கு.
|

அக்காளின்
திருமண வைபோகம் !
முதலில் என்
அக்காவின் திருமணம் நடைபெற்றது.
என் அக்காவும் ஈசு மாமாவும்
காதலித்து மணந்து கொண்டார்கள்.
என் அண்ணனின் நண்பர்
தான் ஈசு மாமா. லால்குடியில்
இருந்த போது என் அக்காவை
சந்திக்க ஈசு மாமா வருவார்.
வரும் போது அக்காவும்
அவரும் கோயில் மண்டபத்தில்
அமர்ந்து கொறித்துக்
கொண்டே பேசுவதற்காக
நிறைய தின்பண்டங்கள்
கொண்டு வருவார். என்
அக்கா வீட்டோடு இருப்பாள்.
நான் தான் கொஞ்சம் அங்கே
இங்கே என்று அக்கம் பக்கத்தில்
வீடுகளில் போய் வந்துக்
கொண்டு இருப்பேன். என்னை
ஈசு மாமா தேடி பிடித்து
அக்காவை அழைத்துக் கொண்டு
வரும்படி சொல்லுவார்.
நான் தான் அக்காவிடம்
விஷயம் சொல்லி வெளியில்
கிளப்பிக் கொண்டு வருவேன்.
பிறகு அவர்கள் இருவரும்
பேசிக் கொண்டிருக்க
நான் ஈசு மாமா கொண்டு
வந்த தின்பண்டகளை பிடுங்கி
வைத்துக் கொண்டு தனியே
ஒரு பத்தடி தூரத்தில்
உட்கார்ந்துக் கொண்டு
மொங்கி கொண்டு இருப்பேன்.
பிறகு அக்காவை வீட்டுக்கு
அழைத்துக் கொண்டு வருவேன்.
இது பல வருடமாக
தொடர்ந்துக் கொண்டு
வந்தது. ஒரு முறை அப்படி
ஈசு மாமா லால்குடி வந்திருந்து
என்னை அழைதது அக்காவை
அழைதது வரும்படி சொன்னார்.
நானும் அக்காவிடம் சொன்னேன்.
அவள் வரவில்லை. மாமாவிடம்
சொன்னேன். திரும்பவும்
அழைத்து வரச் சொன்னார்.
திரும்பவும் அக்காவை
பார்த்து மாமா அழைப்பதாக
சொன்னேன். அவள் வரவில்லை.
மாமாவிடம் சொன்னேன்.
திரும்பவும் அழைத்து
வரச் சொன்னார். திரும்பவும்
அக்கா வர மறுத்தாள்.
அவர்களுக்குள்
ஏதோ ஊடல் போலிருக்கிறது.
இது அறியாமல் நானும்
பத்து முறைகளுக்கு மேலாக
வீட்டுக்கும் கோயிலுக்கும்
இடையே பத்து முறைக்கும்
மேலாக நடந்து விட்டேன்.
மாமா கையில் பெரிய மூட்டையாக
தின்பண்டங்கள் இருந்ததை
பார்த்து விட்டேன். அக்க
வரவே மறுத்து விட்டாள்.
மாமா கோபம் கொண்டு கிளம்பி
விட்டார். அந்த மூட்டையையும்
எடுத்துக் கொண்டு. நான்
தின்பண்ட மூட்டையை அவரிடமிருந்து
பிடுங்கினேன்., இதையாச்சும்
கொடுத்து விட்டு போங்கள்
என்று. இருந்த கோபத்தில்
மாமா அக்காவை கூட்டி
வர துப்பில்லை, திங்க
கேட்குதா என தலையில்
நங்கென்று குட்டி விட்டார்.
செம்ம வலி. வந்த கோபத்துக்கு
நேரே வீட்டுக்கு வந்தால்,
நேர் எதிரில் வெளியே
போய் வந்து அப்போது தான்
அப்பா வந்து நாற்காலியில்
அமர்ந்திருந்தார், வந்த
உடன் விஷயத்தை உடைத்தேன்.
அப்பாவுக்கு வந்த கோபத்தில்
அக்கா அறைக்கு சென்று
ஜன்னலை பார்த்துக் கொண்டு
இருந்த அவளை திருப்பி
விட்டார் ஒரு அறை. பின்னாலயே
வந்த எனக்கு ஒரு அறை. அந்த
நேரம் பார்த்து வந்த
அண்ணனிடம் அப்பா கோபமாக
கத்தி ஈசு மாமாவை கூட்டி
வர சொன்னார். அண்ணன் என்னை
சுருக்கமாக விசாரித்து
லால்குடி பஸ் ஸ்டாண்டு
சென்றது. அங்கே ஈசு மாமாவை
பிடிக்க முடியவில்லை.
திருச்சி மெயின் பஸ்
ஸ்டாண்டு சென்றது. அங்கே
பஸ்சுக்கு காத்துக் கொண்டு
இருந்த ஈசு மாமாவை அப்படியே
பைக்கில் ஏற்றிக் கொண்டு
வீட்டுக்கு வந்தது. நடுக்கூடத்தில்
அழுந்துக் கொண்டிருந்த
ஏன் அம்மா அக்கா வை பார்த்தவுடனே
விஷயம் புரிந்து விட்டது
ஈசு மாமாவுக்கு. அப்புறம்
வீட்டிலிருந்தே விழுப்புரத்துக்கு
விஷயம் பறந்தது. ஈசு மாமா
வின் அப்பாவும் பெரிய
அண்ணாவும் வந்து விட்டார்கள்.
அப்போதே விஷயம் பேசி
முடிக்கப்பட்டது. கிட்ட
தட்ட ஈசு மாமா பணயக் கைதியை
போல் பிடித்து வைத்து
விட்டோம்.
உடனே திருமணம் என்பதை
போல் ஏன் அப்பா பேசினார்.
ஆனால் ஈசு மாமா வீட்டில்
ஈசு மாமாவுக்கு ஒரு அண்ணன்
அதாவது என் கணவர் திருமணமாகாமல்
இருப்பதால் கல்யாணம்
இன்னும் ஒரு வருடம் போகட்டும்
என்றார்கள். அப்பா விடாப்பிடியாக
இருந்து இவள் எனக்கு
மூத்த பெண் இவள் திருமணம்
முடிந்தால் தான் நான்
அடுத்தடுத்தப் பெண்களை
பற்றி யோசிக்க முடியும்,
ஆகவே இந்த கல்யாணம் சீக்கிரம்
முதலில் முடிந்தாக வேண்டும்
என ஒற்றை காலில் நின்றார்.
என் இப்போதைய கணவராகப்பட்டவர்
தனக்கு திருமணம் நடக்கும்
முன்னரே தன தம்பிக்கு
கல்யாணம் நடப்புக் குறித்து
ஒரு ஆண்மகனுக்கே உரிய
வருத்தத்தோடு இருந்தார்.
(என் கணவருக்கு இரண்டு
அண்ணன்களும், ஒரு அக்காவும்,
ஒரு தம்பி இரண்டு தங்கைகள்
உண்டு) அக்காவின் திருமண
ஏற்பாடுகள் தொடங்கின.
என் கணவர் இந்த திருமணத்திற்கு
வர மறுத்து வீட்டில்
முடங்கி இருந்தார். பின்பு
பெரியவர்கள் எடுத்து
சொல்லி திருமண மண்டபம்
வந்தார். வந்த இடத்தில்
அங்கு என் அக்காவுடன்
சேர்ந்து இப்படியும்
அப்படியும் ஊடாடி கொண்டு
இருந்த என்னை பார்த்ததும்
வெகுவாக அப்செட் ஆகியிருந்த
என் கணவராகப்பட்டவர்
ஒரு மாதிரியாக ரீசெட்
ஆகிவிட்டார் என்பதாக
பின்னால வந்த செய்தி.
அப்புறம் அக்கா புகுந்த
வீடு வந்தாள். நானும்
அப்பாவுடன் சேர்ந்து
அங்கு வர போக இருந்தேன்
அக்காவை பார்க்க. ஆனால்
என் கணவருடன் பேசியதில்லை.
அதன் பிறகு என் கணவருக்கும்
ஒரு திருமணம் செய்து
விட வேண்டும் என்கிற
வேகத்தில் தீவிரமாக பெண்
தேட ஆரம்பித்தார்கள்.
இந்த இடத்தில் என் கணவர்
முரண்டு பிடிக்க ஆரம்பித்தார்.
அதற்கு முன்பு வரை ஒரு
ஐந்தாறு இடத்தில் அவருக்கு
பெண் பார்க்க அழைத்து
சென்றிருந்தார்கள். சமர்த்தாக
போய் வந்த என் கணவர் இப்போது
முரண்டு பிடிப்பது ஏன்
என்று எல்லோரும் திகைத்து
போனார்கள்.
அவர் மனதில் ஒரு பிசாசு
குடியேறியது அவர்களுக்கும்
தெரியாது. அந்த பிசாசுக்கும்
தெரியாது. எல்லோரும்
பேசிப் பார்த்தார்கள்.
தனித்தனியே பேசிப் பார்த்தார்கள்.
தனக்கு திருமணமே வேண்டாம்
என்பதை போல பேசினார்
என் கணவர். அப்புறம் என்
அக்கா எங்கள் ஈசு மாமா
அனுமதியுடன் என் கணவரிடம்
வெகு தயக்கத்துடன் பேசினாள்.
அப்போது தான் என் கணவர்
தன் மனதில் உங்கள் தங்கை
குடி புகுந்து விட்டாள்
என சொல்லியிருக்கிறார்.
என் அக்காவிற்கு என்ன
செய்வது என்றே தெரியவில்லை.
உங்கள் தங்கையை எனக்கு
தர வேண்டும் என்கிற கட்டாயமில்லை,
அப்படி தர முடியாதென்றால்
நீங்கள் இங்கே வாழ்வது
கேள்விக்குறியாகிவிடும்
என்கிற மாதிரியாக கட்டாயப்படுத்தல்
எதுவும் கிடையாது., இதில்
உங்கள் வீட்டின் முடிவே
இறுதியானது என்றெல்லாம்
சொல்லி இருக்கிறார்.
அப்புறம் என் அக்கா தன
கணவர், மற்றும் குடும்பத்தாரிடம்
விஷயத்தை சொல்ல எல்லோரும்
என்ன பண்ணுவது என தெரியாமல்
திகைத்துப் பொய் இருக்கிறார்கள்.
அதெப்படி தம்பியை அக்காளும்,
அண்ணனை தங்கையும் திருமணம்
செய்ய இயலும்.? நடக்காத
காரியமாக இருக்கிறதே
என அரண்டுப் போனார்கள்.
அப்புறம் அக்காதான் எந்த
புற்றில் எந்த பாம்பு
இருக்குமோ? எந்த மரத்தில்
எந்த பிசாசு குடி ஏறுமோ
இது நம்ம கையில் இல்லை.
நான் அப்பாவிடம் பேசுகிறேன்
என்று ஒருநாள் கிளம்பி
வந்தாள்.
என் அப்பாவிடம்
அம்மாவிடம் விஷயம் சொல்லி
என்னை தன் வீட்டுக்கு
அழைத்து செல்ல உத்தரவுக்
கேட்டாள். அப்பாவுக்கு
பயங்கர கோபம். எப்படி
இந்த மாதிரியான ஒரு விஷயம்
கேட்க அவர்கள் துணிந்தார்கள்?.
அதையும் உன்னை அனுப்பி
எப்படி கேட்க அவர்களுக்கு
முடிந்தது என்று? என்
அக்காள் பேசுவதில் கெட்டிகாரி.
வெகு சாந்தமாகவே பேசினாள்.
மூடிய அறைக்குள் அப்பாவை
கொண்டுபோய் வைத்துக்கொண்டு
தான் இந்த வீட்டு பெண்ணாக
வரவில்லை, அந்த வீட்டுப்
பெண்ணாக தான் வந்திருக்கிறேன்.
என் கணவரின் வீட்டாரை
நீங்கள் திட்டுவதானால்
அது என்னையும் சேர்த்து
திட்டுவதாய் தான் அர்த்தம்
என்றாள்.
அப்பாவும் சம்மதித்தார்.
பிறகு அனைவரும் கலந்துப்
பேசி எனக்கும் என் கணவருக்குமான
திருமணத்தை பேசி முடித்தார்கள்.
எங்கள் எல்லோரையும் விட
என் அக்கா சசிக்கு தான்
இதில் வெகு சந்தோஷம்.
ஏனென்றால். என் அக்கா
மற்ற தங்கைகளை விட என்னிடத்திலே
வெகு அன்னோன்யமாய் இருப்பாள்.
அந்த அன்னோன்யம் இந்த
வீட்டிலும் தொடர்வது
குறித்து வெகு சந்தோஷம்.
என் அருமை அக்காள்
!
என் அக்கா ஒரு தேவதையை
போன்றவள். அவளிடம் யாரும்
எதையும் பகிர்ந்துக்
கொள்ளலாம். அவள் ஒரு இரும்பு
பெட்டகம். அவளிடம் சொல்லிய
ஒரு விஷயம் யாருக்கும்
போகாது. அவரவர் விஷயங்களை
அவரவர் தான் திறந்து
பார்க்க முடியும். எந்த
ஒரு விஷயத்தையும் ஒரு
சின்ன தலையாட்டுதலோடு
அழகாக கேட்பாள். அவர்களுக்கு
தோதான ஒரு தீர்வை தருவாள்.
என் வீட்டில் என் தவறுக்கு
எங்கள் அப்பாவிடம் அவள்
திட்டும் உதையும் வாங்கி
கொண்டது உண்டு. அவளை விழுப்புரத்தில்
கட்டி கொடுத்து அனுப்பி
விட்டு அப்பாவும், அம்மாவும்
அண்ணன், தங்கைகள் நான்
பட்ட துன்பம் இருக்கிறதே,
ஏதோ தனியே அவளை விட்டு
விட்டதுப் போல. அவளை பார்க்க
அவள் வீட்டுக்கு நான்
வரும்போது சந்தோஷமாக
இருக்கும். ஒருநாள், தங்கி
விட்டு, கிளம்பும் நேரத்தில்
ரொம்பவும் மனது கஷ்டப்படுவோம்.
வாயில் நிலைப்படியில்
அவள் நின்று கையாட்டும்
காட்சி பேருந்தில் ஏறி
மூன்று ஊரை தாண்டியப்
பின்னும் கண்ணிலேயே நிற்கும்.
என் அக்கா என்னை தன கணவரின்
அண்ணனுக்கு பெண் கேட்டு
வரும் போது என் அக்காவுடன்
இருக்க போகிற இனிமைக்காக
தான் வந்தேனே தவிர, மற்றபடி
என் கணவரை பற்றி எல்லாம்
நான் சிந்தித்து பார்க்கவில்லை.
என் அக்கா என் நல்ல இடத்துக்கு
தான் கொண்டு சேர்ப்பாள்
என்கிற நம்பிக்கை எனக்கு
இருந்தது. என் அக்காவை
முதற்கொண்டு தான் நான்
இந்த வீட்டுக்கு வந்து
சேர்ந்தேனே தவிர என்
கணவரை முன்னிட்டு அல்ல.
இதை நான் என் கணவரிடமே
சொல்லி இருக்கிறேன்.
|
மாமி என்கிற
சாமி !
என் மாமியார் திருமதி
சௌந்தரி அவர்கள் மிகவும்
சாந்தமானவர்கள். அதிர்ந்து
பேசாதவர்கள். மிகவும்
மரியாதைக்கு உரியவர்கள்.என்
அக்கா இந்த வீட்டுக்கு
மருமகளாக வந்த பின்னால்,
என் அப்பாவை சம்பந்தி
என்றே அழைத்தவர்கள்,
நானும் இங்கு வந்து சேர்ந்த
பின்னால் என் அப்பாவை
அண்ணா என்று அழைக்கத்
தொடங்கி விட்டார்கள்.
என் அம்மாவும் என் மாமனாரை
அண்ணா என்றே அழைக்கிறார்கள்.
அவர்களுக்குள் இந்த அளவுக்கு
உறவு பின்னல் வந்ததற்கு
பின்னால் எங்கள் வீட்டில்
செய்கிற ஒவ்வொரு நல்ல
விஷயத்தையும் என் அப்பாவுக்கு
ஒரு வார்த்தை தெரிவித்து
விட்டே செய்வார் என்
மாமனார். அது போல என் அப்பாவும்,
எதையும் என் மாமனாரிடம்
கேட்டே செய்வார். என்
மாமியாருக்கு இதில் மெத்த
சந்தோஷம். அந்த சந்தோஷம்
எங்கள் மீதான பிரியமாக
காடபடுவதில் எனக்கும்
என் அக்காவுக்கும் ரொம்ப
சந்தோஷம். மற்ற இரு மருமகள்களும்
கூட என் மாமியாருக்கு
ரொம்ப ஒசத்திதான். என்
கணவரோ என் அக்காவின்
கணவரோ, அல்லது மற்ற மகன்களோ
இரவு வீட்டுக்கு வர நேரமானால்
மருமகள்களாகிய நாங்கள்
கதவை பார்த்துக் கொண்டு
அமர வேண்டியதில்லை. என்
கணவர் இரவு வீட்டுக்கு
திரும்ப நேரமானால் என்
மாமியார் சொல்வார்,"பாக்யா,
நீ போய் படு, அவன் வந்தால்
நான் கதவை திறக்கிறேன்"
என்று. "இல்லை, அத்தை, நீங்கள்
போங்கள், நான் விழித்திருக்கிறேன்"
என்று நான் சொன்னால்
"இல்லை, நீ போ, நான் இருக்கேன்
" என்று சொல்லி என்னை அறைக்குள்
அனுப்பி விடுவார். நேரங்கழித்து
வீட்டுக்கு வரும் என்
கணவர் கதவை தட்ட, கதவு
திறக்கப்பட்டு தன் தாய்
கொட்ட கொட்ட விழித்திருப்பதைக்
கண்டு திருடனுக்கு தேள்
கொட்டியது போலாகி விடுவார்.
" ஏம்மா, நீ விழிச்சிட்டு
இருக்கே, அவள் என்ன பண்றா?
அவளைக் கதவைத் திறக்க
விட வேண்டியது தானே" என்பார்.
என் மாமியாரோ, " ஏன், உன்
அம்மா நல்ல தூங்கணும்,
பொண்டாட்டினா காத்து
கிடக்கணுமா, என்னை போல
தானே அவளுக்கும் விழிப்பும்
தூக்கமும், நீ நேரத்துக்கு
வந்தா அம்மா ஏன் விழிக்கப்
போறேன், அவ ஏன் விழிக்கப்
போறா? , " இல்லேமா, கொஞ்சம்
நேரமாயிடுச்சி", "அதை போன்
பண்ணி சொல்லிட்டு போயேன்,
எங்கையாவது நீ வெளியூரு
ஒரு பத்து நாள் நீ சொல்லிட்டு
போன அன்னைக்கு உன்னை
தேடவா செய்யறோம், ஊருக்குள்ளே
இருக்கும் போது, நேரத்துக்கு
வீட்டுக்கு வந்துடு,
என் பிள்ளை தேவையில்லாத
இடத்தில தேவையில்லாமல்
நின்னுட்டு இருந்தான்னு
யாரும் எனக்கு சொல்லிட
கூடாது. அது எனக்கு முக்கியம்".
"ஒரு நண்பன் மா, ரொம்ப நாளைக்கு
அப்புறம், பேசிட்டு வந்தேன்,
அதான்". " அத என் ரோட்டுலே
பேசறே, அவரை வீட்டுக்கு
கூட்டிட்டு வர வேண்டியது
தானே, இங்கே சாப்பிட வச்சு
இங்கே தூங்க வச்சு, காலைலே
அனுப்பி வைக்கலாமே,அதை
விட்டுட்டு பொண்டாட்டி
காத்துக் கிடக்கட்டும்
, நாம எப்ப வேணாலும் வீட்டுக்கு
போலாம்ன்கிற நினைப்பு
உனக்கு வரக் கூடாது, பொம்பளைங்களுக்கு
ஆம்பளைகளை வெளிலையும்,
பொண்ணுங்களை காலேஜுக்கும்,
பிள்ளைகளை ஸ்கூலுக்கும்
அனுப்பிட்டு நேரத்துக்கு
வராங்களான்னு வயத்துலே
நெருப்பக் கட்டிட்டு
வீட்டுக்கும் வாசலுக்கும்
ஓடி ஓடி பார்க்குற வேலைதான்
காலங்காலமா, அந்த வேலையே
நம்ம நம்பி வந்த ஊரான்
வீடு பொண்ணுங்களுக்கு
தந்துராதிங்க தயவு செய்து".
இந்த வார்த்தைகளுக்கு
பின்னாலும் வீட்டுக்கு
லேட்டாக வர எங்கள் வீட்டு
ஆம்பளைகளுக்கு திணிச்சல்
இருக்குமா என்ன?
|
உணவுகளும் உறவுகளும்
!
எங்கள் வீட்டில் உணவு
பழக்கமுறைகள் ஆரம்பத்தில்
நான் வந்த புதிதில் கொஞ்சம்
போல தகராறாய் இருந்தது.
எங்கள் வீட்டில் நிறைய
நபர்கள் என்பதால் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு தினுசாக சொன்னார்கள்.
இது செய் இன்றைக்கு, அது
செய் இன்றைக்கு என்பது
போல. அப்புறம் இதை ஒழுங்குப் படுத்துவதென்ற கட்டாயத்துக்கு
வந்தோம். இப்போதெல்லாம்
காலை உணவு என்பது வெளியே
படிக்க செல்கிற குழந்தைகளுடையது,
காலேஜுக்கு செல்கிற நாத்தனார்களுடையது.
பள்ளிக்கு காலேஜுக்கு
செல்கிறவர்கள் தங்களுக்கு
ஏற்ற உணவை எதிர்ப்பார்ப்பது
தானே முறை. ஆக காலை உணவு
என்பது அவர்களின் விருப்பம்
போல இருக்கும். மதிய உணவு
என்பது வீட்டில் இருக்கிற
எங்கள் மாதிரியான பெண்களுடையது.
எங்களுக்கு விருப்பமான
உணவை செய்து உண்போம்.
ஆண்களுக்கு அவ்வளவாக
மதிய உணவில் விருப்பு
இருக்காது. அவர்கள் வருவதும்
போட்டதை உண்டு விட்டு
வெளியே ஓடுவதுமாக இருப்பார்கள்.
இரவு உணவு என்பது ஆண்களுக்கானது.
அவர்களுக்கு என்ன வேணுமென்று
போனை போட்டு விசாரித்தாவது
சாதமோ, டிபனோ செய்து விடுவோம்.
இரவில் வீடு வருகிறவர்கள்,
எங்களுக்காக ஓடி உழைக்கிறவர்கள்
ஒரு நல்ல உணவோடு வந்து
படுப்பது தானே முறை. அவர்களின்
மனமும் வயிறும் நிறைவாய்
இருப்பது எங்களுக்கு
தானே நல்லது. அடுத்த ஒரு
எட்டு மணி நேரம் எங்கள்
எங்கள் கணவர் மாரோடு
கிடக்கப் போவதும் நாங்கள்
தானே.
|
என் மாமா ரஜினி விசிறி
!
என் அக்காவின் கணவர்
ஈஸ்வர் கொஞ்சம் போல ரஜினி
ரசிகர் . ஒரு நாள் வீட்டில்
எல்லோரும் டிவி பார்த்துக்
கொண்டு இருக்கும் போது
"வெற்றி கொடிக் கட்டு'
படத்தில் நடிகை மாளவிகா பாடும் "கருப்புதான்
எனக்கு பிடித்த கலரு"
என்கிற பாடல் ஓடிக் கொண்டு
இருந்தது. அந்த பாடலில், என்ன என்ன
விஷயங்கள் கருப்பு என்பதை
சொல்லிக் கொண்டே வருவார் ,
பாட்டின் இறுதியில் "நம்ம
ஊரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும்
கருப்புதான். அவரு கலரு
கருப்புதான்" என்று பாடி
முடிப்பார். என்ன அக்க
கணவர் அந்த வரிகளை கேட்டதும்
கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு
தன் அம்மாவிடம் சொன்னார்,
"அம்மா, இந்த பாட்டுலே
பாரு, அவ கருப்பெல்லாம் எதுன்னு சொல்லிகிட்டே வரா,
முக்கியமா அந்த பாட்டுக்கு
கடேசில, இந்த பாட்டை
எழுதினவன் பாட்டை முடிக்கிறான்
பாரு, தமிழ்நாட்டு சூப்பர்
ஸ்டாரு சொல்லிட்டு டாககு
டாக்கு டாககுன்னு தலைவரோட நாலு
ஸ்டில்லை சும்மா அப்படி அப்படி
போட்டு காமிச்சு, ரஜினிகாந்து
கருப்புதான், அவரு கலரு
கருப்புதான் முடிக்கிறான்
பாரு, இந்த பாட்டுக்கே
அதுதான்மா முத்தாய்ப்பு அடாடா"
என்றார். உடனே நான் சொன்னேன்,
'அந்த கவிஞர் இன்னும்
அழகா முடிச்சிருக்கலாம்,
நம்ம ஊரு சூப்பர் ஸ்டாரு
ரஜினிகாந்து கருப்புதான்,
அவரு பணமும் கருப்புதான்'
என்று முடித்திருந்தால்,
அது முத்தாய்ப்புகெல்லாம்
முத்தாய்ப்பாய் அமைந்திருக்கும்"
என்றேன். என் மாமா
முகத்தில் எள்ளும் கொள்ளும்
வெடித்தாற் போல இருந்தது.
எங்கள் சிந்தனைகள்!
எங்கள் வீட்டில் எல்லாம்
பள்ளி செல்லும் பிள்ளைகளும்
கல்லூரி செல்லும் பெண்
பிள்ளைகளும் காலை எட்டரைக்கு
மேல் வீட்டில் இருக்க
அனுமதி இல்லை. அதே போல்
ஆண்களும் ஒன்பதரை மணிக்கு
மேல் வீட்டில் இருக்க
அனுமதியில்லை. கிளம்பி
விட வேண்டும். இல்லையேல் கழுத்தை
பிடித்து வெளியேற்றப்படுவார்கள்.
உடல் நிலை சரியில்லாத
போது வீட்டில் இருந்துக்
கொள்ளலாம். தவறில்லை.
மற்றபடி மதியம் வீட்டுக்கு
சாப்பிட வருகிற ஆண்கள்
மட்டும் வரலாம். சமையல்
தயாராக இல்லாத போது வீட்டில் அவர்கள் இருக்கும் நேரத்திற்கு கணக்குப்
பார்ப்பதில்லை. ஆனால்
சாப்பிட்டு முடித்தவுடன்
கை கழுவும் நேரத்தில்
இருந்து அடுத்த அரை மணி
நேரத்தில் கிளம்பி விட
வேண்டும். புதிதாக கல்யாணம்
ஆனவர்களுக்கு ஒரு மூன்று
மாத காலம் சலுகை உண்டு.
பிள்ளைகள் மாலை மூன்றரை
மணி போல திரும்புவார்கள்.
கல்லூரி போனவர்கள் ஆறு
மணிக்குள் திரும்பி விட
வேண்டும். ஆண்கள் அவரவர்
வேலைகளை பொறுத்து இரவு
எட்டரை ஒன்பதரை பத்தரை
என்று ஆகும். அதற்கு மேல்
என்றால் ஒவ்வொரு அரை
மணி நேரத்திற்கு ஒருமுறை
தங்கள் இருப்பை பற்றி
எப்போது வருவோம் என்பதை
பற்றி தகவல் தந்துக்
கொண்டே இருக்க வேண்டும்.
பிள்ளைகளும் மாலை வீடு
வந்து சேர்ந்த பின் விளையாட
வேண்டும். ஆறு மணிவரை.
மிஞ்சிப் போனால் ஆறரை
மணி வரை. நாங்கள் எங்கள்
பிள்ளைகளை டியூஷன் அது
இது என்றெல்லாம் அனுப்புவதில்லை.
நாங்களே ஒருவர் மாற்றி
ஒருவர் பக்கத்தில் அமர்ந்து
படங்களை சொல்லிக் கொடுத்து
விடுவோம். பிள்ளைகள்
நூறு தொண்ணூறு என மார்க்
எடுக்க வேண்டும் என்று
வற்புறுத்துவதில்லை.
அறுபது எழுபது போதும்.
குழந்தைகளை சித்திரவதை
செய்ய நாங்க தயாரில்லை.
இங்கு அக்கம் பக்கம்
வீடுகளில் பிள்ளைகள்
பள்ளிகளில் இருந்து வந்த
உடனே முகம் கழுவக் கூட
நேரம் இல்லாமல் டியூஷனுக்கு
விரட்டப்படுகிறார்கள்.
இரவு எட்டரை போல வீடு
திரும்பி தூங்கி போனோம்
என்பது கூட அறியாமல்
தூங்கி போவார்கள். எங்கள்
பிள்ளைகள் அப்படியல்ல.
நிறைய விளையாடுவார்கள்.
சுமாராக படிப்பார்கள்.
பல பெற்றோர்கள் எங்களிடம்
"என்ன இது பிள்ளைகளை இப்படி
விளையாட விட்டு இருக்கிறீர்கள்,
என் பிள்ளை இந்நேரம்
டியூஷனில் இருப்பான்.
போட்டி நிறைந்த உலகத்தில்
இன்று நாம் வாழ்ந்துக்
கொண்டு இருக்கிறோம்,
பிள்ளைகள் நிறைய மார்க்குகள்
எடுக்க வேண்டும். அப்போது
தான் பெரிய அளவுக்கு
சம்பாதிக்க முடியும்"
என்றெல்லாம் கூறுவார்கள்.
நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,
எங்கள் பிள்ளைகளை வெளியே
எங்கும் இன்னொருவரிடம்
பணி புரிய நாங்கள் அனுப்ப
போவதில்லை. எங்கள் பிள்ளைகள்
அனைவருக்கும் சொந்த தொழில்கள் தான்
அமைத்து தரப் போகிறோம்.
அவர்கள் இன்னொருவரிடம்
வேலை பார்க்க போனால்
தானே இந்த மார்க்கும்
கீர்க்கும். சொந்த தொழில்
செய்யப் போகிறவர்களுக்கு
தொழில் பயிற்சியும்,
கொஞ்சம் கல்வியும் போதுமே.
அவரவர் தொழிலுக்கு அவரவரே
ராஜாவும் ராணியும் ஆக
இருப்பார்களே.
|
|
சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் தமிழ்நாட்டில் கழுகு இனமே
இல்லை என்பதாக ஒரு செய்தி.
மேற்கு மலைத் தொடர்ச்சி மலை
முழுக்க வனத்துறை அதிகாரிகள்
நடத்திய பறவைகள் கணக்கெடுப்பில்,
தாங்கள் எந்த கழுகையும்
பார்க்கவில்லை என்பதாக
வந்த செய்தி மிகவும்
அதிர்ச்சியாக இருந்தது.
ஈழத் தமிழர் பேரழிவுக்குப்
பின்னால் இந்த செய்தி
என்னை மிகவும் பாதித்த
ஒன்று. மற்றப்படி இந்தியாவின்
மேல் பாகிஸ்தான்காரன்
அணுகுண்டை போட்டான் என்பதுக்
கூட எனக்கு அதிர்ச்சியாக
இருந்திருக்காது. நான்
பறவைகள், பூக்கள், கடல்,
மலை என இயற்கையின் மீது
பெரு விருப்புக் கொண்டவள்.
அவைகளை உள்ளது உள்ளபடி
அப்படியே விரும்புபவள்.
நான் கல்யாணமாகி விழுப்புரம்
வந்த இரண்டாம் நாள் எங்கள்
வீட்டு மாடியில் நின்றுக்
கொண்டு இருந்தேன். காலை
மணி எட்டரை இருக்கலாம்.
வானில் 'கிகிக்கீ' என
ஒரு பெரும் சத்தம். அண்ணாந்துப்
பார்த்தேன். வானில் பறாந்துகள்
வட்டமடித்துக் கொண்டு
இருந்தன. வியப்புடன்
பார்த்துக் கொண்டு இருந்த
நேரம் என் கணவராகப்
பட்டவர் மேலே வந்து
விட்டார். சத்தம் கேட்டு
அவரை கண்டுக் கொண்ட நான்
அவருக்கு முதுகை காட்டியப்
படி நின்றுக் கொண்டு
பறாந்துகளை நோட்டமிடத்
தொடங்கினேன். என் கணவர்
சுவரில் சாய்ந்தபடியே
நான் என்ன பார்க்கிறேன்
என்று கவனித்து அவரும்
வானத்தை பார்க்கத் தொடங்கினார்.
பின்பு,"எங்கள் விழுப்புரத்தில்
நிறைய கழுகுகள் இருக்கு,
தினம் தினம் இந்த நேரமும்,
சாயந்தரம் போலவும் நிறையப்
பார்க்கலாம்" என்றார்.
நான், "கழுகுகளா எங்கே"
என்றேன்.
"அதோ, மேல பார்த்துகிட்டு
இருக்கியே,அதான்".
"ஓ, இதான் உங்க ஊருலே
கழுகுகளா?".
"ஏன் , உங்க ஊருலே என்ன
சொல்லுவீங்க?".
"எங்க ஊருலே இது 'பறாந்து'
ன்னு சொல்லுவோம்".
"பறாந்தா ? இதான் கழுகு"
. திரும்பி அவரை பார்த்தேன்.
"நீங்க முன்னே பின்னே
கழுகு பார்த்து இருக்கீங்களா?,
இது பறாந்து, கழுகு ங்கறது
வேற. பெரிசா இருக்கும்"
என்றேன்.
"ஹலோ மேடம், எங்க ஊருக்கு
பக்கத்துலே 'திருக்கழுகுன்றம்"ன்னு
ஒரு ஊரே இருக்கு, அங்கே
தினமும் கழுகு வந்து
சாப்பிட்டு போகும், தெரியுமா?"
என்றார்.
"நீங்க பார்த்து இருக்கீங்களா?".
"நான் பார்த்ததில்லை,
ஆனா அந்த ஊருக்கு கழுகுதான்
பேமஸ்".
"இவ்வளவு பக்கத்துக்கு
ஊருலே ஒரு புகழ் பெற்ற
ஸ்தலம் இருக்கு, நீங்க
என் பார்த்ததில்லை?" .
"அது வந்து, வந்து...வேற
நிறைய இடமெல்லாம்
போய் இருக்கேன். இது போனதில்லை".
"அதாவது, கிட்டே இருக்குறே
எதுக்குமே மரியாதை இருக்காது,
சரியா, தூர இருக்கறது க்குதான்
மரியாதை இல்லே, திருப்பதில
இருக்கறவன் தினமும் மலை
ஏறி வெங்கட்டாசலபதியை
கும்பிட்டுகிட்டா இருக்கிறான்,
நாம தான் இங்கிருந்து
ஓடறோம் திருப்பதிக்கு. ஆனா
அவன் அங்கிருந்து மேல்மருவத்தூர்
வரான் இல்லையா?'
"அதான் நீங்க வந்துட்டீங்கள்ளே,
இனி பார்க்காத இடத்தை
எல்லாம் பார்த்துருவோம்லே"கண்களை
சிமிட்டியப்படி என்றார். கண்களில்
கொஞ்சம் போல ஏதோ வில்லங்கம் தெரிவது
போல இருந்தது. கொஞ்சம்
நேரம் சும்மா இருந்தேன்.
"ஆமா நீங்க உங்க ஊருலே
சுத்தி இருக்குற எல்லாம்
பார்த்துட்டீங்களா".
"ஓ , ஒரு பெண்ணுக்குள்ள
சுதந்திரத்தை பயன்படுத்தி
என்னல்லாம் பார்க்க முடியுமோ,
எல்லாம் பார்த்திருக்கேன்,
ஏன், உங்க திருக்கழுகுக்குன்றம்
கூட வந்து பார்த்திருக்கேன்".
வியந்தார்.
"அப்படியா , எப்ப?". என்னவோ,
அப்பவே தெரிஞ்சிருந்தா உன்னை வந்து
பார்த்திருப்பேன் என்கிற
மாதிரி.
"நான் ஆறாவது படிக்கும்
போதுன்னு நினைக்கிறேன்".
"கழுகு பார்த்தியா,
உன் கண்ணாலே, அது வந்து.....ஐயர்
கையால பிரசாதம் சாப்பிடுறதை"
"உம், பார்த்தேனே". "சொல்லு,
கேப்போம்" என்றார் ஆவலுடன்
"அப்ப நான் ஆறாவது படிச்சிட்டு
இருந்தேன். ஸ்கூல்லே
சுற்றுலா போறதா ஒரு திட்டம்.
திருச்சில்லாம் நிறைய
பார்த்திட்டோம். இப்ப
கொஞ்சம் தூரமா போறதா
பிளான். தலைமை ஆசிரியை
சொல்லிட்டாங்க , பதினாலு
மணி நேர டூரு. அதுக்குள்ளே
போய்ட்டு வந்திரணும்"
ஒரு டீச்சர் சொன்னாங்க,
திருக்கழுகுக்குன்றம்
ன்னு. ஒத்துக்கலை மேடம்.
எங்களுக்கு விஷயம் தெரிஞ்சு
இன்டர்வெல்ல மேடத்தை
பிடிச்சி ஒரே ராவடி பண்ணோம்.
ஓகே சொல்லிட்டாங்க. நல்ல
வெள்ளிக்கிழமையா பார்த்து
கிளம்பினோம். திருச்சிலர்ந்து
வர வழிலே சிலது பார்த்திட்டு,
பதினொன்றை கெல்லாம் திருகழுகுக்குன்றம் போயிரணும்ன்னு
ப்ளான்.நாங்கள் டிரைவரை
விரட்டினோம். அவரு வண்டியை விரட்டினார்.
வந்து விட்டோம். பதினொரு
மணிக்கு. மலையை பார்த்ததும்,
ஜென்சி டீச்சர் மலைத்துப்
போய் நெஞ்சில் ஒரு கையும்
இடுப்பில் ஒரு கையும்
வைத்துக் கொண்டார். என்ன
டீச்சர் இடுப்பை பிடிச்சுக்கிட்டீங்க?"."
எத்தனை படிக்கட்டு. வேறு
நேரமாய் இருந்தால் எண்ணி
இருப்பேன். மொத்தம் 70
மாணவர்களும் மலையை நோக்கி
ஓடினோம். டீச்சர்கள்
கத்தினார்கள். "எல்லோரும்
கைகளை பிடித்துக் கொண்டு
மொத்தமாய் தான் போகணும்".
யாரு கேட்டோம். தப தபன்னு
ஏறினோம். டீச்சர்கள்
கத்திக் கொண்டே துரத்த ஆரம்பித்தார்கள்.
அவர்களுக்காக பார்த்தால்
கழுகை பார்க்க முடியாது.
ஒன்னும் பார்க்க முடியாது.
அப்புறம், போய் வந்த கதையை
கட்டுரை வேற எழுத சொல்லுவாங்க.
அகல அகலமான படிக்கட்டு.
முதியவர்கள் ஒரு படி
ஏறி அதையே குறுக்காலே நடந்து
ரெண்டாம் படியேறி அதையும்
குறுக்காலே நடந்து மூன்றாம்
படி ஏறினார்கள். அவர்கள்
நம்மை போல ஏறினால் நெஞ்சு
வலிக்கும். ஆனா ரொம்ப
கௌரவமா இப்படி ஒவ்வொரு
படியும் குறுக்காலே ஏறி
வரேன்னு என்னோட வேண்டுதல்ன்னு
சொல்லிக்குவாங்க. மேல
ஏறி வந்துட்டோம். டீச்சர்கள்
ஆடி அசைஞ்சி ஏறி வந்தார்கள்.
வந்து கோபமா பார்த்து
திட்டறதுக்குள்ளே , வாங்க
டீச்சர், சாமி கும்பிட்டுருவோம்ன்னு
கோயிலுக்குள்ளே நகர்ந்திடோம்.
நல்லா வசதியா, ஏற்கனவே
நின்னிட்டு இருந்தவங்களை
எல்லாம் தள்ளி நகர்த்திட்டு
முன்னாலே போய் நின்னு
"சாமி, எனக்கு நல்லா கழுகு
தெரியற மாதிரி எந்த பனங் கொட்டை
மண்டையும் மறைச்சிராம வசதியா இடம்
பண்ணி கொடு சாமி" ன்னு
வேண்டிகிட்டு விபூதி
குங்குமம் வச்சிக்கிட்டு
வெளியே வந்தேன். தோழிகளும்
வந்தார்கள். டீச்சர்களும்
வந்தார்கள். "எங்கேடி
கழுகு வரும், கொஞ்சம்
விசாரிங்கடி" என்றார்
சியாமளா டீச்சர். இந்த
விசாரிப்பு ஒருத்தர்
காதில் விழுந்து அவராகவே
சொன்னார்," அதா, அந்த பக்கம்
போங்க, நேரம் கடக்குது,
பிள்ளைகள கையிலே புடிங்க"
. எல்லோரும் அந்த பக்கம்
ஓடினோம். மலையின் முடிவு.
பெரிய கிரில் கேட். பூட்டி
இருந்தது. அந்த இண்டு
இடுக்குலே பார்க்கணும்
போல அதுக்கு அந்தாண்ட
பாறைகள். ஒரு மேடான பாறை.
நேரம் என்ன, நேரம் என்ன
இதான் எல்லோருடைய விசாரிப்பு.
ஒருத்தர் மைக்குலே சொல்லுறாரு,
கழுகு வரும் நேரம், வந்துக்
கொண்டு இருக்கிறது பறந்து.
யாரும் சத்தம் செய்யாதீர்கள்.
மிரண்டு வராமல் போய்
விடலாம். குழந்தைகள்
சத்தம் போடாதீர்கள்.
அமைதியாய் இருந்து கழுகினை
கண்டு அருள் பெற்று செல்வீர்களாக". சுமதி
சொன்னாள். இவன்தான் ரொம்ப
பேசி சத்தம போடறான்".பிள்ளைகள்
அடங்கி விட்டார்கள்.
பெருசுகள் தான் "சுலோசனா,
சாவித்திரி" என்றெல்லாம்
யார் யாரையோ அழைத்துக்
கொண்டு இருந்தார்கள். ஒரு
ஐயர் ஒருத்தர் கையில்
ஒரு சொம்பும், ஒரு கூடையில்
துணி போட்டு மறைத்த எதையோ
எடுத்துக் கொண்டு கதவருகில்
வர அவரை மட்டும் அந்த
கேட்டை திறந்து உள்ளே
செல்ல விட்டார்கள்.
அவரும் மெல்ல நடந்து
பாறைகளின் மேல் ஏறி மொட்டை பாறையில் அமர்ந்தார். "அமைதி
அமைதி, நேரம் பதினொன்று
ஐம்பத்து ஐந்து. சத்தம
செய்யாதீர்கள். கருட
பகவான் வருகிறார். அமைதி"
என்று மைக்கில் குரல்
வந்துக் கொண்டே இருந்தது.
(சீக்கிரம் வரும்)
|
|
|